காதல் உன்னை காயப்படுத்தியதாக சொல்பவளே
நேசம் உன் நெஞ்சில் உள்ளதா சொல்?
நீ பூமியில் தொலைத்ததை
வானத்திலா பெறப்போகிறாய்?
தாயின் மார்பைக் கடித்துவிட்டு
வீரிடும் குழந்தைக்கூட
தாலாட்டுப் பாடும்
தாயைப் பார்த்திருக்கிறாயா?.
உன்னால் ஆராதிக்கப்படாத
இந்த உலகம்
உன்னை ஆராதிக்கும்
என்று எப்படி எதிப்பார்க்கிறாய்.
பசை இல்லாத் தலையும்
பஞ்சடைத்த கண்களும்
உன் பார்வயில் பட்டதில்லையா?
அவர் கேசம் கோதும்
நேசம் உண்டா உன்னிடம்?!
அவர் ஆடைத்துவைத்து
ஒரு வாய் அமுதூட்டுமா
உன் கைகள்?!!.
ஒரு குருடனின் கைப்பிடித்து
நிலவைச் சொல்லி இருக்கிறாயா?
இரவெல்லாம் விழித்திருப்பவளே
கொஞ்ச நேரம் அவனுக்கு
பார்வையாக இருந்திருக்கிறாயா?.
உறவுகளிடம் கூட ஒட்டாதிருப்பவளே
உறவுகளே இல்லாத்தவர்களிடம்
கைக்கோர்த்திருக்கிறாயா?
அவர் கண்ணீர் துடைத்திருக்கிறாயா?!.
கண்களில் கருனை மை தடவிப்பார்
தேகம் மறைக்க ஆடையின்றி
இருக்குமொரு கூட்டம்
ஒரு கைக்குட்டையேனும்
நெய்ததுண்டா உன் கைகள்?.
இரைப்பையில் காற்றை
நிறைப்பி இருக்குமொரு கூட்டம்
ஒரு கவளம் விளைத்ததுண்டா நீ?.
நீ உண்டதெல்லாம்
நீ விளைத்ததா?
நீ சுவாசித்தது
தேகம் கழுவியதெல்லாம்
உன்னுடையவையா?
உன்னை சுமந்தவளுக்கும்
சுமப்பவளுக்கும்
இயற்கை உனக்கு கொடுத்த
ஒவ்வொன்றுக்கும்
ஒரு கடன் இருக்கிறது.
உன் வயதுக்கொரு
மரம் வளர்த்தேனும்
அதை அடைக்கும்
எண்ணமுண்டா
உன்னிடம்.
ஏனடீ கண்களை
மூடிக்கொண்டு
உலகம் இருட்டென்கிறாய்!.
உன்னால் ஒதுக்கப்பட்டது
உலகில்
ஓராயிரம் கோடி
உன்னை ஒதுக்கியதாய் சொல்லுதல்
உண்மைக்கு புறம்பு.
அன்புக்கு ஏங்கிடும் உயிர்கள்
பல்லாயிரம் கோடி
உன் கைகள் நீண்டால்
அதில் ஒரு நூரேனும்
சுகப்படாதா??.
அன்பு உன் கண்களில் இருந்தால்
இந்த பூமியைத் தழுவிக்கிடக்கட்டும்
உன் கைகள்.
நான் சொல்லவந்ததை எல்லாம்
சொல்லிவிட வில்லை
சொல்லக் கூடாததையும்
சொல்லிவிடவும் இல்லை.
கடைசியாக ஒன்று,
பூக்களை மட்டும்
நேசிப்பது
சுயநலம்.
எனவே,
முற்களையும்
முத்தமிடட்டும்
உன் உதடுகள்.
2 comments:
very long but nice.
Are you a communist?
வருகைக்கு நன்றி, மனிதனாக வாழத்தான் விருப்பம்
Post a Comment