Tuesday, March 25, 2008

நட்பு

என்னால் முற்களும் மலரும்
எனக்கொன்றென்றால்
மலரும் முள்ளாகும்

முள்ளை முள்ளால் தான்
எடுக்கவேண்டு மென்பார்கள்
நான் மட்டும் தான்
முற்களை பூக்களால் எடுக்கிறேன்

இயந்திர வாழ்க்கையில்
இதையத்திற்க்கு ஒத்திடம்
என்னிடம் கிடைக்கும்

காதலில் கூட
கொடுக்கல் வாங்கல்
உறவுகளோ பந்த பாசம்
உறவுகள் உணர்வுகள் தாண்டி
நேசக்கரம் நீட்டுபவன்
நான் மட்டும் தான்

என் கரம் பற்றிக்கொண்டால்
பயனுண்டா தெரியாது
பயன்பாடு பாராமல்
பழகுபவன் நான்

என்னை பொருத்தவரை
சோற்றுக்கில்லார் கூட
ஏழையில்லை
சோர்ந்த போது -கொஞ்சம்
சாய்ந்து கொள்ள
என் தோள் கிடைக்காதவரே
ஏழை

எனக்கு உருவம் கிடையாது
உணரத்தான் முடியும்
நான் காற்றும் கிடையாது
ஆனால் சுவாசம்

எனக்காக உயிரை விட்டவர்கள் கூட
இன்னும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்
ஏனென்றால் வாழ்க்கையே நான் தான்

நான் வித்தியாசமான
சிலந்தி வலை
என்னில் விழுந்தவர்களை
நானே காக்கிறேன்

பற்றிக்கொள்ள ஒரு
கொம்பு கண்டவுடன்
சுற்றிக்கொள்வதில்லை நான்
வெட்டிக்கொன்ற போதும்
விட்டு விலகாதிருப்பதும் நானே

ஒளியில் உறவாடி
இருளில் மறையும்
நிழலல்ல நான்
உயிரில் உறவாடி
உன்னோடிருப்பவன்

என் பெயர் சொல்லி
வருபவரெல்லாம் நானில்லை
ஆராயாமல் அனுமதிக்காதீர்கள்

அரிதாரம் இல்லாத
அழகு நான், -என்னை
உங்கள் உச்சந்தலையில்
சூடிக்கொண்டால்
உங்கள் நிழல் கூட
மாற்றான் காலில்
விழ தேவையில்லை

No comments: